“வாராணசி” நாவல், ஒரு மரணத்தின் தூது
வாராணசி நாவல் பூடகமாக புகைப்படம் எனும் கலையை அடிநாதமாகக் கொண்டிருந்தாலும் மனித வாழ்வின், அதுவும் பெண்களின் (இந்திய சுதந்திரக் காலத்தின் பின்) வாழ்வை அதன் இறுக்கங்களையும், துயரத்தையும், அலைகழித்தல்களையும், சீரழிவையும் பதிவு செய்கிறது. மூன்று பெண்கள் உள்ள வீட்டில் மூத்தவளான பவித்ரா எப்படி நிர்வாணக் கலை வடிவமாக கன்னித்தன்மையுடன் வாராணசியில் எரியூட்டப்படும் சிதைகளுக்கு முன் நின்று எதிர்வரும் மரணத்தை தன் கடந்தகாலங்களுடன் ஒப்பிட்டு சாவித்திரியாக மாறுகிறாள் என்பதே கதையில் பிரதான மையம். சாவித்திரி எனும் பெயரில் புகைப்படக் கலையாக எப்படி மேற்குலகு நோக்கி நகர்கிறாள் அங்கே கொண்டாடப்படும் பவித்ரா, தனது முன்னாள் கணவனுக்கும், தன் தங்கை சுமதிக்கும் கையில் கிடைத்து எப்படி நிர்வாணமாகிறாள் என்பதற்கான தொடர்ச்சிகள் கதையில் கச்சிதமானவை.
நாவல் தலைப்பில் சொல்வது போல் காலம், மரணம் குறித்தான ஒரு மயக்க நிலையையே வாசிப்பில் தருகிறது. கலாச்சார ஒழுங்குகள் என்று ஆண்கள் உருவாக்கிய பழைய தயாரிப்புகளின்படி பெண்கள் எப்படி காலனிய காலத்தின் பின் அதுவும் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் இறுக்கமான, சலிப்பூட்டும் வாழ்வை வாழ்ந்தார்கள், ஏன் இப்போதும் கூட வாழ்கிறார்கள் என்பது ஒரு துயரமாக நாவலின் நெடுக வருகிறது.
துவக்கத்தில் காதல், காமம் போலான உடலின் இயற்கைகள் நிறைவேறாமலும், மறுக்கப்படுவதாயும், அதன் மீறல்கள் ஒழுக்கக்கேடாகவுமான நிலை, ஓஷோவுக்குப் (ஆலன் கின்ஸ்பர்க், மரிஜுவானா, ஓப்பியம் இன்ன பிறவும் கலந்து) பின் நாவலில், உடல் தன் இறுக்கங்களை அவிழ்த்து, முந்தைய ஒழுங்குகள் எனும் தயாரிப்புகளை உடைத்து இதா எனும் பெண்ணால் நாவலின் இறுதியில் மறுமலர்ச்சியாக கட்டமைக்கப்படுகிறது. நிர்வாணம் என்றவுடன் நமக்கு மனதில் ஏற்படும் ஒரு கிளர்ச்சியை நாவல் வாசித்து முடித்தவுடன் ஒரு கலங்களற்ற நதி நீரைப்போல் மனதில் நல்ல தெளிவை கற்பித்து ஆசுவாசப்படுத்துகிறது. இறுதியாக நாவல் கட்டமைப்பிலும் புத்தக வடிவத்திலும் புதுமைதான். ஆனால் அடைப்புக்குறிகள் துவங்குவது முடிப்பது நீண்டு இருப்பதால் வாசிப்பில் தொடர்ச்சி இழப்பையும் சலிப்பையும் தருகிறது. இனிவரும் காலங்களில் அடைப்புக்குறி வரிகளை சாம்பல் எழுத்துகளில் போட்டால் எளிமையாக இருக்கலாம். இடையில் எங்கேயும் அத்தியாயத் தொடக்கம் இல்லாமலும் பத்திகள் பிரிக்காமலும் பா.வெங்கடேன், தேதி, நேரம் என கடைசியில் எழுதி நம் எல்லோருக்கும் அவர் எழுதிய கடிதத்தை போல் உள்ளது அழகு.
Reviews
There are no reviews yet.