ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி தன் கொடிய நகங்களால் மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று முனைகளையும் பற்றியிருந்த நேரம். ஆற்காடு நவாபின் பெயரால், கிழக்குப் பாளையங்கள் உதவியோடு பூலித்தேவர் தலைமையில் போரிட்ட மேற்குப் பாளையங்களைத் தோற்கடித்திருந்த காலம். ஆங்கில படைகளும் ஆற்காட்டு நவாப்பின் படைகளும் இணைந்து தன் கிராமத்தைச் சூறையாடி, தன் பெற்றோர் உட்பட மொத்த கிராமமும் படுகொலை செய்யப்படுவதை பார்க்கும் மௌனசாட்சியாகிறான் வேலன் என்ற சிறுவன்.
யாரிந்த ஆங்கிலேயர்? அவர்களிடம் நாம் எப்படி அடிமையானோம் என்ற அவனது அறிவுத்தேடல் அன்று தொடங்குகிறது. புதுச்சேரியில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த போரின் போது இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு பலியான ஒரு நெசவாளர் குடும்பத்தில் தப்பி பிழைத்தவள் முத்தம்மா என்ற சிறுமி. தன் பதின்பருவத்தில் வேலனின் தேடுதல் பயணத்தில் இணைகிறாள். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக விலை மதிப்பற்ற “ஹீரா பிஜ்லி” என்ற மின்னல் வைரத்தை கண்டுபிடிக்கும் ஆபத்தான முயற்சியில் இருவரும் இறங்குகின்றனர். திருநெல்வேலியில் இருந்து தில்லி வரை, சென்னையில் இருந்து பூனா வரை, கல்கத்தாவிலிருந்து பானிபட் வரை அவர்களின் பயணம் தொடர்கிறது. வேலூர் புரட்சியில் அவர்களின் லட்சியம் வெந்து தணிகிறது.
Reviews
There are no reviews yet.