மூணாறுதான் நாவலின் கதைக்களம். மூணாறின் அழகையும் குளுமையையும் மட்டுமே உணர்ந்த நாம் இந்த நாவலின் வழியே மூணாறின் வலியினை உணர முடிகிறது. கேரளாவில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டி தனி ஒரு மதமாக இன்னமும் வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். திருக்குறள், கீதையைப் போல் விவிலியத்தைப்போல், குர்ஆனைப்போல் அவர்களுக்கு ஒரு வேதம். கொலைப் பழி சுமத்தப்பட்ட தேடப்படும் குற்றவாளியான ஒருவர் தன் மகளைத் தேடி பயணம் மேற்கொள்கிறார். தன்னுடைய மகளை கண்டாரா? மகளுக்கு இவரை அடையாளம் தெரிந்ததா? அந்த மகளை காப்பாற்றி வைத்திருந்த நபர் மகளை இவரிடம் காண்பித்தாரா? என்பது இந்த புதினத்தின் ஒற்றை வரி இழை. இந்த ஒற்றை வரிக் கதை அப்படியே விரிந்து மூணாறின் வரலாற்றை நமக்கு செப்புகிறது.
மனிதர்களே இல்லாத காடு. எவ்வளவு பரிபூரணமான இயற்கை. மொழியே இல்லாத காடு. ஒரே மொழி.நிசப்தம் என்று துவக்கும் இவர் அந்த நிசப்தத்தின் பின்னால் புதைந்திருக்கின்ற போராட்டத்தை, வலியினை, இழப்பினை பதிவு செய்து மூணாறின் மற்றொரு பரிமாணத்தை நம் கண் முன்னே காட்டி இருக்கிறார்.வெறும் கற்கால குகை என்று அறிந்த அவர்களுக்கு, குறிப்பேட்டிலிருந்து எடுத்து அது ‘பாண்டியன் பெரு’ என்று வரலாற்றை அவர்களுக்கே எடுத்துரைத்திருக்கின்றார்.
மரத்தை வெட்டி, மண்ணை வெட்டி, மலையை வெட்டி ஊரை உண்டாக்குனது யாரு? நம்மாட்கள்தான். துரைமாருங்க காட்டுக்குள்ள அங்க இங்க தங்கக்காசை வீசிடுவாங்க. மரங்களை வெட்டி இந்தக் காட்டை சீர்படுத்துங்க. தங்கக்காசு கிடைக்கும். யாருக்கு கிடைக்கிறதோ அவங்களுக்கே அது சொந்தம் அப்படின்னு சொல்லுவாங்க. சில பேருக்கு கிடைக்கவும் செஞ்சுது. அந்த உத்வேகத்தில் நிறைய பேர் களத்தில் இறங்கிட்டாங்க. அப்படித்தான் ரோடு ஊரு வந்துச்சு. இப்பவும் மூணாறு மலைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தங்கம் இருக்கிறதா தங்கம் சுரங்கம் இருக்கிறதா ஒரு பேச்சு. ஆனால் இது வெறும் வரிகள் அல்ல. மூணாறு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றைக் கூறும் வலி மிகுந்த வரிகள்.
Reviews
There are no reviews yet.