கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் இவை.
பொறியியல் முடித்துவிட்டு ரோபோடிக்ஸ் படிப்பேன் என்று நினைத்ததில்லை. 2005 ஆம் ஆண்டில் என்னை எம்.டெக் மெக்ட்ரானிக்ஸ் படிப்பில் சேர்த்துவிட்டு அழுத முகத்தோடு அம்மாவும் கவலை தோய்ந்த அப்பாவும் தொடரூர்தியில் ஏறினார்கள். அவர்களுக்கு பிரிவுத் துன்பம். ஆனால் எனக்கு வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றுக் கொள்ள நிறைய இருந்தன. பேராசிரியர் விவேகானந்தன் சண்முகநாதனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எதையாவது தூண்டி விட்டுக் கொண்டேயிருந்தார்.
ரோபோடிக்ஸில் வல்லுநர் ஆகவில்லையென்றாலும்- அங்கு அடிப்படையைக் கற்றுக் கொள்ள முடிந்தது.
படித்து முடித்த சில வருடங்களில் கல்கியில் பணியாற்றிய திரு.கதிர்பாரதி ‘ஒரு தொடர் எழுத முடியுமா?’ என்று கேட்ட போது ‘ரோபோடிக்ஸ் பற்றி எழுதட்டுமா’ என்று கேட்டேன்.
ரோபோடிக்ஸ் பற்றியதொரு எளிமையான சித்திரத்தைத் தர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. எழுத ஆரம்பித்த பிறகுதான் ரோபோடிக்ஸ் என்ற பெருங்கடலுக்குள் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. படிப்பது வேறு. படித்ததைத் தாண்டி எழுதுவது வேறு. கையளவு நீரை அள்ளி எடுத்தாலே போதும் என்ற முடிவுக்கு வர வெகு காலம் பிடிக்கவில்லை.
Reviews
There are no reviews yet.