போகன் சங்கர்

போகன் சங்கர்

போகனின் கவிதைகள் தனித்துவமான கவிமொழியைக் கொண்டவை. அவரது சில கவிதைகளை வாசிக்கையில் எமிலி டிக்கின்சன் என் நினைவில் வந்து போகிறார். உள்ளார்ந்த வகையில் எமிலி டிக்கின்சனிடம் காணப்படும் தத்தளிப்பு மற்றும் தனிமை சார்ந்த உலகம் போகனிடமும் காணப்படுகிறது.

போகனின் கவிதைகள் அன்றாட உலகோடு இணைந்து வாழ முடியாத, ஆனால் வாழ விரும்புகிற, சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் இடையில் ஊசலாடுகிற ஒரு மனிதனின் குரலை வெளிப்படுத்துகின்றன.

உடல் தான் கவிதைகளின் மையம். உடலைக் கைக்கொள்வது, சமநிலை கொள்ளவைப்பது, காமத்தாலும் வலியாலும் நிராசைகளாலும் நினைவுகளாலும் உடலும் மனமும் கொள்ளும் கொந்தளிப்புகளைத் தனது கவிதைகளின் வழியே தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்.

நகுலன் தனது படைப்புகளில் தன்னை விட்டு விலகி நின்று தன்னைப் பார்க்கக்கூடியவர். இருப்பு இன்மை இரண்டுக்கும் நடுவில் சஞ்சாரம் செய்பவர். நகுலனிடம் மீட்சியற்ற கையறுநிலையும் வெறுமையும் வெளிப்படும் ஆனால் அதே சஞ்சாரத்தை மேற்கொள்ளும் போகன் வெறுமைக்கு மாற்றாக இருப்பின் அவசியத்தை, சகல துயரங்களுடன் வாழ்வே முதன்மையானது என்கிறார்.

பிரார்த்தனை என்பது சமயம் சாராத விஷயம் என்பதாக இவரது கவிதைகளை வாசிக்கையில் உணர்ந்தேன்.
~ நன்றி: எஸ்.ராமகிருஷ்ணன்

  • Male
  • 6